![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/12/Screenshot_20211220-064004_Collect-1.jpg)
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதியிடப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இருந்து குறித்த கடிதம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரந்துபட்ட பிரதேசத்தை உள்ளடக்கிய தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பல தரப்பினரிடமும் மக்களாலும்,
புத்திஜீவிகளாலும் முன் வைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் காலத்தில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனிடமும் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன் போது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அளித்த வாக்குறுதிக்கமைவாக தென்மராட்சி பிரிப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போது எல்லைநிர்ணயக் குழுவின் அனுமதிக்காக சென்றுள்ள நிலையில் எல்லைநிர்ணயக் குழு தென்மராட்சியை பிரிப்பதற்கான எல்லை வரைபுகளை அனுப்புமாறு மாவட்ட செயலரைக் கோரியுள்ளது.
தற்போது அறுபது கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரியும் பட்சத்தில் தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் – தென்மராட்சி மேற்கு பிரதேச செயலகம் என
இரண்டாக பிரிவடையும்.தென்மராட்சி கிழக்கு 28கிராம அலுவலர் பிரிவுகளாகவும், தென்மராட்சி மேற்கு 32கிராம அலுவலர் பிரிவுகளாகவும் பிரித்து கடந்த காலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.