மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணம் தொடர்பில் அமைத்த  மீள் விசாரணை குழுவை பரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு மீண்டும் மனு…..!

(நெல்லியடி நிருபர்)

பிரதமரின் உத்தரவிற்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணைக் குழுவில் தம்மால் சந்தேகத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரது உறவினர், நண்பர்கள் இடம்பெற்று இருப்பதனால் முக்கியமான தகவல்கள் பல மறைக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரன் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திலே மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதாகோவில் வீதி, துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் கடந்த 17.11.2020 அன்று அவர் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அப்போது கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த வீரசிங்க என்பவர் தற்கொலை என கூறி எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும்

இது தற்கொலை அல்ல கொலை என அவரின் சகோதரனால் ஜனாதிபதி,பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோருக்கு அறிவித்ததன் விளைவாக பிரதமர் மகிந்தராஜபக்ச இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணித்திருந்தார்.

பொலிஸ்மா அதிபரின் பணிப்பிற்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதில் தாம் தெரிவித்த பல விடயங்கள் மறைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளதாகவும்,

இதற்கு காரணம் அவ் விசாரணைக் குழுவில் தம்மால் சந்தேகத்தின் பெயரில் குறிப்பிட்ட நபரின் உறவினர், நண்பர்கள் இருக்கின்றமை தற்போது தெரியவந்துள்ளதாகவும்,

இதனால் அவர்களை நீக்கி விசாரணைகளை முன் கொண்டு செல்ல உதவுமாறு அவரின் சகோதரன் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews