மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரிப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சார்பில் குறித்த மனுக்கள் இன்று வெள்ளிக்கிழமை(19.11.2021) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழலிலும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும் இந்த நிகழ்வை நடாத்துவது குற்றம் எனவும், இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்த மனு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றப் பதில் நீதவான் வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நாளை மறுதினம்- 21 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும்- 28 ஆம் திகதி வரை ஒரு வாரத்துக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடை உத்தரவு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews