போராட்டங்களால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடலாம்! – ஜனாதிபதி எச்சரிக்கை

“நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலையளிக்கின்றது. போராட்டங்களால் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம்.

இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐந்து வருடகால ஆட்சியின்போது ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பலவீனங்கள் காரணமாகவே, அவர்களுக்குப் பதிலாகத் தம்மை மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.

இருப்பினும், முன்னதாக அதிகாரத்தில் இருந்திருக்காதவர்கள் போல் எதிர்க்கட்சியினர் தற்போது செயற்படுவது கவலையளிக்கின்றது.

இந்த முறைமையை மாற்றுவது எதிர்காலத்துக்கான தற்காலத் தேவையாக உள்ளது.

தற்கால உலகின் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆளுகை காணப்படுகின்றது.

புதிய தொழில்நுட்ப அறிவின்றி எமது எதிர்காலச் சந்ததியினர் இந்த உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியாது.

அதனைப் புரிந்துகொண்டு, புதிய தொழல்நுட்பத்துடன் கூடிய எதிர்காலச் சந்ததியினருக்காக, கல்வியில் உடனடியாக மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்” – என்றார்.

Recommended For You

About the Author: admin