அரச குடும்ப அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலனை கரம் பிடித்த ஜப்பானிய இளவரசி.

ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார்.
ஆனால் ஓர் அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்பத் தகுதியை இழக்கமாட்டார்.
ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் கொடுப்பது வழக்கம். அத்தொகையைப் பெற மகோ மறுத்துள்ளார்.
அதே போல அவரது திருமணத்தில் ஜப்பானிய அரச குடும்பத்தின் வழக்கங்கள் சடங்குகள் பின்பற்றப்படவில்லை.
இந்த இரண்டையும் மறுத்த முதல் அரச குடும்பத்துப் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மகோ.
இளவரசி மகோ நேற்று செவ்வாய்கிழமை ஜப்பானிய நேரப்படி காலை 10 மணியளவில் டோக்யோவில் உள்ள தன் வீட்டிலிருந்து, தன் பெற்றோருக்கு பல முறை தலைகுனிந்து வணக்கம் கூறி, தன் திருமணத்தை பதிவு செய்யப் புறப்பட்டார்.
தன் இளைய சகோதரியையும் கட்டியணைத்து விடைபெற்றதாக க்யோடோ முகமையில் செய்தி வெளியானது.
திருமணத்துக்குப் பிறகு இவர்கள் அமெரிக்காவில் குடியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு கொமுரு வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

Recommended For You

About the Author: Editor Elukainews