தனிமைப்படுத்தலை மீறி கோவிட் தொற்றுடன் நடமாடியவர் மடக்கி பிடிப்பு.

கோவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நடமாடித் திரிவதாக வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர், கைது செய்யப்பட்டு கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சிவபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.இந்நிலையில், குறித்த கோவிட் தொற்றாளர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கோவிட் தொற்றுடன் வீட்டில் இருந்து வெளியேறி பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதாகவும், நடமாடித் திரிவதாகவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை தேடி விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சிறிய ரக உழவு இயந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற நிலையில் குறித்த கோவிட் தொற்றாளர் சுகாதாரப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உடனடியாகவே வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews