இந்திய இராணுவ தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்க பாதிரியாருக்கு அஞ்சலி..!

36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கிழக்கில் 07.06.2024  நினைவு கூரப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மட்டக்களப்பு சர்வமத சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தையின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பலமிக்க அமைச்சராக இருந்த, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு வந்த, இந்திய அமைதி காக்கும் படையின் கடுமையான நடவடிக்கைகள் தமிழர்களுக்கு மற்றுமொரு துன்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதுவரை சிங்கள இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்குவதற்கு ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு அரச படைகள் தெற்கிற்கு அழைக்கப்பட்டன.

இந்திய அமைதி காக்கும் படைகளின் ஆட்சியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாக்குதல்கள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மனித படுகொலைகள் மற்றும் சொத்து சேதங்கள் அதிகரித்துள்ள நிலையில், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ தலைமையிலான பிரஜைகள் குழு, இதற்கு எதிராக மட்டக்களப்பில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அமைதியான போராட்டத்திற்கு இந்திய அமைதிப்படை கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தது.

அப்போதிருந்து, அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ இந்திய இராணுவத்தின் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளானார்.

“நான் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். கடவுள் நம்பிக்கை உள்ளவர். மக்களின் வாழ்க்கையை நேசிப்பதே எனது மதம். எந்தப் பக்கத்திலிருந்தும் கொலையைக் கண்டிக்கிறேன். நீங்கள் அமைதியைக் கொண்டுவர வந்தீர்கள் என்றால், உங்களால் அதைச் செய்ய முடியாது. நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. ஆயுதங்களால் எந்த வகையிலும் அமைதியை ஏற்படுத்த முடியாது. புலிகள் எங்கே இருக்கிறார்கள் என என்னை சொல்லா் சொல்கிறீர்கள். நீண்ட காலமாக உங்களால் உதவிகள் வழங்கப்பட்டு நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட அவர்களை சமாதானத்திற்காக மீளக் கொண்டுவர உங்களால் முடியாவிட்டால், சாமானியர்களுடன் இருக்கும் எனக்கா அதைச் செய்ய முடியும்” என இந்திய அமைதி காக்கும் படைத் தலைவர்களின் கேள்விகளுக்கு முகங்கொடுத்து அருட்தந்தை பெர்னாண்டோ கூறியிருந்தார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதிலும் மட்டக்களப்பு மக்களுடன் இருந்த அருட்தந்தை 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி மாலை ஐந்து மணியளவில் தேவாலய விடுதியில் இருந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு மாநகரம் இந்திய அமைதி காக்கும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்களுக்குத் தெரியாமல் கொலை நடைபெற்றிருக்காது என்ற பலமான நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே அன்று காணப்பட்டது.

இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் ஆயுதக் கும்பல்களான EPRLF மற்றும் PLOT மீதும் மக்களின் சந்தேகம் எழுந்தது, ஆனால் பின்னர் இந்திய அமைதி காக்கும் படையின்் சிரேஷ்ட இராணுவத் தலைவர் ஒருவர் இது அவரது கனிஷ்ட அதிகாரி ஒருவரின் தலையீட்டின் செயல் எனக் கூறியதாக வெகுஜன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

1987 ஒக்டோபரில் நடந்த தொடர் படுகொலைகள் தொடர்பாக, ஜே. ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சமாதானத்திற்காக வந்த வடக்கை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படையினருக்கு எதிராக உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஊடகவியலாளர்களும் நம்பகமான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதற்கு நீதி கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இருநாட்டு ஆட்சியாளர்களும், தமிழ்ப் போராளிகளுடனான மோதலில் மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களை ஆண்டுதோறும் மிக உயரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews