ஐ.நாவின் முக்கிய பிரதிநிதிகள்- அநுர கொழும்பில் திடீர் சந்திப்பு…!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றையதினம்(09)  கொழும்பிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதாக அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பு தொடர்பில் அநுர வெளியிட்ட முகநூல் பதிவில்,

குறித்த சந்திப்பின்போது இலங்கையின் நடப்பு மனித உரிமைகளின் நிலைமை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயன்முறை பற்றி இரு தரப்புக்கும் இடையில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக இலங்கையில் நல்லிணக்க செயன்முறையை உன்னிப்பாக அவதானிப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எதிர்வரும் தேர்தல் செயன்முறைக்குள் அரசியல் கட்சிகளால் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தினர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கலாசாரமானது தொடக்கத்தில் இருந்தே ஒழுக்கநெறிக் கோவையை அடிப்படையாகக் கொண்டிருந்ததென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் வலியுறுத்தியதோடு, அவர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளுக்கு எமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தோம் எனவும் அநுர குறிப்பிட்டுள்ளார்.

இச் சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் பெட்ரிக் மெகார்த்தி, ஐ.நாவின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பகுப்பாய்வாளர் நெத்மினி மெதவல மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் ஆகியோரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews