வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம்

சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் வழங்குமாறு கோரி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் இளைய உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிடம் சமர்ப்பிப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த வாகன உரிமப் பிரச்சினையை தன்னால் மட்டும் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல என்றும் அவர் கூறுகிறார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் கோரும் யோசனை அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்ட போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வேளையில் இவ்வாறான பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது எனவே சாதாரண அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்று வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவது குறித்து மாத்திரமே பரிசீலிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடிக்கு அதிகமான பெறுமதியான வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு முன்னர் கடமையில்லா வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews