வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இணைத் தலைவர்களான கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (18/04/2024) நடைபெற்றது.
காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என கௌரவ ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார். “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60,000 பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகள் உரியவாறு மேற்கொள்ளாது சில தனியார் நிறுவனங்கள் குழாய் கிணறுகளை அமைப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய கௌரவ ஆளுநர், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
நகர அபிவிருத்தி திட்டங்களின் போது பொதுமக்கள் இலகுவில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் தெரிவித்தார். ஒவ்வொரு துறைசார் திட்டங்களும் வலயங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் இலகுவில் அணுகக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews