தீவிரமடைந்து வரும் களனிப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக  மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம்  குறித்து களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின்  தலைவர்  திஸ்ஸபுர ஸ்ரீ சுமேத கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த பல நாட்களாக மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்வு  தருமாறு நாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

குறிப்பாக  அம்புலன்ஸ் வண்டியொன்றை மாணவர்களுக்காக வழங்குமாறு தெரிவித்திருந்தோம். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இவற்றை கவனத்தில் எடுக்கவே இல்லை.

அவர்கள் தங்களின் தேவைக்காகவும் அரசாங்கத்தின் தேவைக்காகவும்தான் இதுவரை காலமும் செயற்பட்டார்கள்.

தற்போது இதனால் ஒரு மாணவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் அந்த மாணவன் சுகயீனம் அடைந்தபோது, சக மாணவர்கள் நிர்வாகத்தை தொடர்புக்கொள்ள தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியும்கூட, அவர்கள் தொலைப்பேசி அழைப்பிற்கு பதில் வழங்கவில்லை.

பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து, முச்சக்கரவண்டியில் குறித்த மாணவரை சக மாணவர்கள் ஏற்றிக் சென்றபோது, தான் ஒரு வாகனத்தை இவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆண்கள் விடுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே குறித்த மாணவர் உயிரிழந்துவிட்டார்.

இன்னும் 5- 10 நிமிடங்கள் முன்கூட்டி அவரை அழைத்து வந்திருந்தால், அவரை காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிர்வாகத்திற்கு இந்த மாணவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவர்களின் அசமந்த போக்கினால்தான் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினைகளை நாம் எடுத்துக் கூறினால், பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கப்படுவதில்லை என்பதுதான் இவர்கள் கூறும் பதிலாக உள்ளது.

மாணவர்களுக்கு உரிய தீர்வொன்று வழங்கும்வரை, நாம் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews