மைத்திரி விரைவில் சிறை செல்வார்: உதய கம்மன்பில

பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்
தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து, பொருளாதார பாதிப்புக்கு வித்திட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களின் அதிகார போட்டியால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியவர் யார் என்பதை தான் அறிவேன், நீதிமன்றம் அழைப்பு விடுத்தால் உண்மையை பகிரங்கப்படுத்த தயார் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல கூடாது பொலிஸூக்கு செல்ல வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு கூற விரும்புகிறேன்.
பயங்கரவாதம், அரசுக்கு எதிராக செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தும் அதனை உரிய தரப்புக்கு அறிவிக்காமல் மறைப்பது 10 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிகடை சிறைக்கு செல்வார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews