அனுர குமார திசாநாயக்க புரிந்து கொள்ள வேண்டிய ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு..!!

இலங்கையின் 76 வருட  தொடர் ஏமாற்று அரசியலின்  புதிய முகமான அனுர குமார திசாநாயக்க புரிந்து கொள்ள வேண்டியது  ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டையே என தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் நேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிவித்தலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அந்த ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக் காலங்களாக இலங்கை அரசியலில் அடுத்த ஜனாதிபதியாக யார் வரப் போகின்றார். என்ற ஒரு கேள்வியும் அதற்கான போட்டிகளும் காணப்படுகின்ற களச்சூழலின் அடிப்படையில் தற்போதைய பொருளாதாரச் சிக்கலையும் அதற்கான தீர்வையும் மட்டுமே முன்னிறுத்தி அநேக வேட்பாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.

குறிப்பாக அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட பின் 76 வருட அரசியல் வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தீவில், தமிழினத்தின் அடிப்படை இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இதுவரை யாரும் வெளிப்படையான கருத்தையோ அல்லது அதற்கான திட்டமொன்றையோ முன்வைத்ததை நாங்கள் காணக்கூடியதாக இல்லை.

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அந்த குழுவினர் அண்மைக் காலமாக  யாழ்ப்பாணம் வவுனியா கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தங்களுடைய தேர்தல்  பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இதுவரை நடைபெற்ற பிரச்சாரங்களின் போது அனுகுமார அவர்கள்  தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர், இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சனை குறித்து எதையுமே பேசாமலும், மகிந்த அரசும் ரணில் அரசும் கூறுவது போல், சமஷ்டி அல்லது 13++ தருவோம்  என்று தான் டீல் போட வரவில்லை என்றும்,  அவர்களுக்கான தேவை அது அல்ல என்பதையும் கூறியதுடன், இவற்றுக்கு மாறாக இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளை மாத்திரமே மையப்படுத்தி அவர் தனது உரைகளை முன்னெடுத்திருந்தார்.

எமது ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை குறித்தும் அதற்கான தொரு நிரந்தரத் தீர்வு குறித்தும் தன்னுடைய பதிவுகளில் எங்குமே அவர் குறிப்பிட தவறிவிட்டார் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

இரண்டயிரத்து ஒன்பதாம் ஆண்டு மரபு வழியான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனநாயக நீரோட்டத்தின் வழியில் தமிழ்த் தேசிய அரசியலின் முன் நகர்வுகளை தமிழீழ மக்களாகிய நாம் முன்னெடுத்து வருகின்ற சூழலில், அதை ஒட்டியே தமிழ் தேசிய அரசியல் தரப்புகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும்  புலம்பெயர் வாழ் தமிழர் அமைப்புகளும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு யுத்த மௌனத்திற்குப் பின்பு மாறி மாறி வந்த சிங்கள அரசுத் தலைமைகள் அதாவது இலங்கை அரசாங்கம் இது வரையிலும் தமிழர்களுக்கான இனப் பிரச்சினையின் நிரந்தர தீர்வு என்று ஒன்றைக் காத்திரமாக முன்வைக்கவில்லை.

காலத்திற்கு காலம் அவர்கள் ஒவ்வொரு விடயங்களை முன்வைத்து காணிப் அதிகாரம், பொலிஸ் அதிகாரம், 13, பெடரல் என்கின்ற பலவற்றைப்   பேசிய போதும், இவை  ஒன்றும் இதுவரை நடைமுறையில் சாத்தியமாக்கப்படவில்லை.

இவ்வாறு காலங்கள் கடந்து செல்கின்ற தருணத்தில் மாறி மாறி வந்த அரசாங்கங்களின் இஸ்த்திரமான பொருளாதாரக் கொள்கை இன்மையும் ஊழலாலும் நயவஞ்சக ஆட்சியின் மூலமாகவும் இலங்கையின் பொருளாதாரம் தள்ளப்பட்டுள்ள இன்றைய நிலையும் நாம் அறிந்த விடயங்களாகும்.

இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதி கோட்டாபய மக்கள் எழுச்சியின் மூலம் மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட வரலாறும் இலங்கையிலே பதிவானது.

அதனைத் தொடர்ந்து   அன்று நிலவிய சூழலுக்கு ஏற்ப இலங்கைக்கு ஒரு அதிபர் தேவை என்கின்ற ஒரு இடைக்கால தேர்வுக்காக, மக்களின் அதிகாரம் அளிக்கப்படாத ஜனாதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்று இருக்கின்றார்

இந்நிலையில் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் இதுவரை காலமும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜனநாயக வழிமுறையானது இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு ஒரு எட்டாக்கனியை போன்று தோற்றமளிப்பதற்கு இந்த பொருளாதாரப் பின்னடைவுதான் காரணம் என சிங்களக் கட்சிகளால் காட்சிப்படுத்தப்படுகிறது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தத்தை அனைத்துத் தரப்பினரும் மேற்கொண்டு வரும் நிலையில்,

அடுத்து ஜனாதிபதியாக வரக்கூடியதும் மக்களின், அதிகமான வாக்குகளைப் பெறக்கூடியதுமானவராக அனுரகுமார திசாநாயக்கா தோற்றமளிக்கின்ற களச் சூழலில் தமிழ் மக்களுடைய வாக்குகளும் அவருக்கு தேவைப்படும் என்கின்ற ஒரு கட்டாயத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுடைய வாக்குகளை குறிவைத்தும் அனுரகுமார திசாநாயக்கா தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களும் புத்திஜீவிகளும் தற்போது ஆதரவை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்ற களச்சூழலில் நமது தமிழ் தேசிய அரசியல் பரப்பிலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னாயத்தங்கள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

அநேக தமிழ் பேசும் மக்களும் அனுரகுமார திசாநாயக்காவை ஆதரிப்பதன் ஊடாக ஈழத்மிழர்களுடைய, புரையோடி உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படலாம் என்கிற ஒரு எண்ணப்பாட்டில் ஆதரவை  வழங்கும்  ஒரு நிலையையும் காணக்கூடியதாக இருக்கிறது.

எது எவ்வாறாக இருப்பினும் நாம் கடந்து வந்த வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடையதும் கடமையாகும். இதுவரை காலமும் ஆட்சிக் கட்டில் ஏறிய அனைத்து அரசாங்கங்களும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு  முன் தமிழர்களுக்கான தீர்வை அவர்கள் இன்ன விதமாக தருவோம் என்று பல விடயங்களை குறித்து அவர்கள் பேசியிருந்தாலும் அவை மேடைப் பேச்சோடு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டவை ஆயிற்று. பாராளுமன்றத்தில், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் சட்டத்தையோ அல்லது அதற்கான தீர்வு கொண்டு வந்து தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு முடிவு காணவோ இவர்கள் தயாராக இல்லை.

அரசாங்கத்தின் பொய் வாக்குறுதிகளையும் சிங்களக் கட்சிகளின் மேடைப் பிரச்சாரங்களையும் மீண்டும் மீண்டும் தொடரும் அதே வாய்ப் பேச்சுக்களையும் கண்டு ஏமாறும் நிலையிலும் தமிழ் தேசிய மக்கள் இல்லை என்பதை தற்போதைய வேட்பாளர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் இதை நன்கு விளங்கியிருத்தல் நலம்.

அவர் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும்  வவுனியாவிலும் உரையாற்றுகையிலும் மக்களை சந்திக்கையிலும், குறிப்பாக, அவர் கிளிநொச்சியில்  உரையாற்றுகையில், இந்தத் தேர்தல் எமது இனப்பிரச்சனைத் தீர்வுக்கான தேர்தல் இல்லை என்பதையும், மாறாக நாட்டை கட்டி எழுப்பவும் அதை மேற்கொண்டு முன்னேற்றகரமாக செயல்படுத்தவும் தான் இந்த தேர்தலை அவர் மையமாக வைத்திருப்பதை தனதுரையின் சாராம்சத்தின் ஊடாகத் தெரிவித்திருந்தார்.

இது எமக்கு உண்மையில் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தைத் தேர்தல் வெற்றிக்காகப்  பகடைக் காய்களாகப் பயன்படுத்தும்  சிங்களத் தலைமைகளின் இதுவரை கால,  அதே பழைய ஏமாற்று யுக்தி அரசியலை தான் இன்றும் காண்பிக்கின்றது.

தேர்தல்  கள மேடைகளில் அனுகுமார அவர்களுடைய வார்த்தை ஜாலங்கள் உச்சக்கட்டத்தை தொட்டு, மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஓர் அணியில் சேர்த்திருந்தாலும், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் எதிர் வரும் தேர்தலில் எத்தரப்பிற்கு வாக்களித்தாலும், அது தலை வருத்தத்திற்கு தலையணையின் உறையை மாற்றியதை போல் தான் அமையப் போகின்றது.

அனுரகுமார திசாநாயக்கா வெளிப்படையாக தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால், ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு நான் இவ்வாறான  தீர்வுகளை முன்வைக்கின்றேன் என்று அவர் வெளிப்படையாகவே அறிவிக்க வேண்டும். என்னென்ன யோசனைகளை செயல்படுத்துவேன் என்று பகிரங்கமாக ஈழத் தமிழர்களுக்கு அவர் வெளிப்படுத்தாமல் ஈழத் தமிழருடைய வாக்குகளை ஒருபோதும் அவர் பெற்றுக்கொள்ள இடம் அளிக்க கூடாது, பெற்றுக் கொள்ளவும் முடியாது.

ஏனென்றால். ஈழத் தமிழருடைய அரசியல் வரலாற்றில் அவர்கள் ஒரு உதைப்பந்தாட்ட திடலில் அகப்பட்டு கொண்ட உதைபந்து நிலைக்கே தள்ளப்பட்டு இருக்கிறார்கள், மாறி மாறி வருகின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களும் உதைத்து உதைத்து மாறி மாறி கோல்களுக்கு அனுப்புவதை போன்று, ஈழத்தமிழர்களை வைத்து அவரவர் காரியங்களை சாதித்து கொண்டார்களே ஒழிய ஈழத்தமிழருடைய பிரச்சினைக்கு இதுவரை தீர்வொன்றும் வழங்கவில்லை. இவ்வாறான யதார்த்த  சூழ்நிலையில் தற்போது ஈழத் தமிழர்கள் விழித்திருந்து தங்களது வாக்கை பயன்படுத்த வேண்டிய ஒரு சூழலில் இருக்கின்றோம். அந்த வாக்கை பயன்படுத்துவதற்கு முதல் அவர்கள் தங்களை உபயோகப்படுத்துகின்ற தரப்பினர் யார் என்பதை நன்கு இனம் காண வேண்டும்’

எதிர்வரும் 23ஆம் தேதி கனடாவிலே புலம்பெயர் சமூகத்தை சந்திப்பதற்காகவும் அவர்களுடைய ஆதரவை திரட்டுவதற்காகவும் அனுரகுமார திசாநாயக்காவின் கனடா விஜயத்தை குறித்து கனடா வாழ்  ஈழத் தமிழர் தெளிவாக இருப்பது நல்லது. ஈழத்தமிழருடைய இனப்பிரச்சினைக்கான தீர்வை வெளிப்படையாக அனுரகுமார திசாநாயக்கா தெரிவிக்காத சூழலில் அவருக்கான ஆதரவையோ அல்லது அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதையோ. கனடா வாழ் ஈழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ஏனென்றால் எமது இனத்தின் அடையாளம் புலத்தில் இருக்கும் எமது சமூகத்தின் இருப்பிலே தான் தங்கியிருக்கின்றது என்பதைத் தற்காலத்தின் கள சூழல் தெளிவாக உணர்த்தி இருக்கின்றது.

தளத்தில் இருப்பவர்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொண்டிருப்பதும் புலத்தில் உள்ளவர்களுடைய குரல்களும் அவர்களின் முன்னெடுப்புக்களும் தான் முக்கிய காரணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தளத்தில் இருக்கின்ற எமது ஈழத் தமிழ் தேசியவாதிகள் சிங்கள அரச பேரினவாதிகளின் ஆசை வார்த்தைகளுக்கும் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் சோரம் போய் இருக்கின்றதை நாங்கள் அதிகமாக காணக் கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவிற்கும் ஈழத் தமிழர்களை ஏமாற்றலாம் என்ற எண்ணம் இருப்பின் அதை அவர்  கைவிடுவது நல்லது. குறிப்பாக தனது அரசியல் நகர்வை அவர் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு காலத்தில் அவர் இருந்தாலும், அவர் ஈழத் தமிழருடைய பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன் வைக்காமல் ஒருபோதும் ஈழத் தமிழர்களின் வாக்கை எதிர்பார்க்க  ஆசைப்படவும் கூடாது அதற்கான சந்தர்ப்பத்தை ஈழத் தமிழர்கள் அவருக்கு வழங்கவும் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் நமக்கு வரலாறுகள் தான் எமது வழிகாட்டிகள், காலங்கள் கடந்த பின்பு தான், எமக்கு அதை நிரூபித்து தருகின்றன. ஆகவே இத்தனை காலமும் ஏமாந்தது போதும் இனிமேலேனும் தமிழினம்  ஜனநாயக வழி எனும் பாதையில் மீண்டும் மீண்டும் ஏமாறாமல் எம் பிறப்புடன் வந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான எமது நியாயமான அபிலாசைகளை வென்றெடுக்க  முன்வர வேண்டும்.

பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி நிற்கின்ற ஈழத்தமிழர்கள் மத்தியில் சென்று அனுரகுமார திசாநாயக்கா பேசுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளையோ அல்லது தேசிய ரீதியாக நாங்கள் ஒன்றித்து மக்களுக்கான ஒரு அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கின்ற அவரது கோஷங்களையோ கேட்கும் பொழுது ஈழத்தமிழர்கள் மனநிலை எவ்வாறு இருக்கின்றது என்றால்,  தாகத்தோடு இருக்கின்ற ஒரு நபரிடம் சென்று பலகாரம்  சாப்பிடுகிறீர்களா என்று கேட்பது போல் இருக்கின்றது.

எனவே  அனுரகுமாரா திசாநாயக்கா அவர்கள் ஈழத்தமிழர்களுடைய இனப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை  பகிரங்கமாக முன்மொழிவதை மாத்திரமே நாங்கள் தற்சமயம் கேட்கின்றோமே ஒழிய தீர்வை தாருங்கள் என்று நாங்கள் அவரிடம் கேட்கவில்லை. தீர்வுக்கான வழி என்ன அதற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை அவர் வெளிப்படையாக கூறாத பட்சத்தில் தமிழர்களுடைய வாக்குகளை கேட்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை ஏனெனில் தீர்வை முன் வைக்காமல் ஆட்சிக்கு வந்ததன் பிறகு தீர்க்கிறோம் என்கிறதெல்லாம் செல்லாக்காசு அரசியல், அவற்றை நாங்கள் கண்டு கண்டு ஏமாந்த சரித்திரங்கள் தான் அதிகமே ஒழிய ஒன்றையும் நாங்கள் நிதர்சன பூர்வமாக காணவில்லை, ஆகவே இனியும் நாங்கள் தொடர்ந்து ஏமாற ஏமாளிகள் இல்லை.

இம்முறை இந்த  ஜனாதிபதி தேர்தலானது ஒரு வரலாற்றுத் தேர்தல் ஈழத் தமிழர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க போகின்ற ஒரு தேர்தல் ஆகவே நாங்கள் விழிப்புடன் இருக்கின்றோம். எங்களை யாரும் ஏமாற்ற முடியாது, என்பதை அனைத்து வேட்பாளர்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் ஈழத் தமிழர்களாகிய நாம்  பொதுவாக தெரிவித்துக் கொள்கின்றோம். ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு நீங்கள் முன்வைக்கின்ற தீர்வுத் திட்டங்கள் என்ன அதற்கான யோசனைகள் என்ன என்பதை வெளிப்படையாகவும் பொதுப்படையாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் நீங்கள் மும் மொழியிலும் பிரசுரித்து அதனை பகிரங்கப்படுத்தி அதற்கு பிற்பாடு தமிழருடைய வாக்குகளை பெறலாம் என்று நீங்கள் சிந்திப்பது தான் சிறப்பு ஆகும்.

ஜனநாயகத்தின் விழுமியங்களைத் தான் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் ஜனநாயக வழியில் கேட்டு நிற்கின்றோம் வரும் ஜனாதிபதி தேர்தலிலே களம் இறங்கி இருக்கின்ற அனுர குமார திசாநாயக்கா உட்பட ஏனைய வேட்பாளர்களாக இருக்கட்டும், தற்போதைய ஜனாதிபதியான ரனில் விக்ரமசிங்கவாக இருக்கட்டும் அல்லது பொதுஜன பெரமுனையை முன்னிறுத்துபவர்களாக இருக்கட்டும் அல்லது சஜித் பிரேமதாஸ அணியாக இருக்கட்டும் எவராக இருந்தாலும் ஈழத் தமிழர்களாகிய எங்களின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வுத்திட்டத்துடன் வாருங்கள் எனும் எமது   நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

நீங்கள் யாராகவும் எவராகவும் இருங்கள் இலங்கை நாட்டைப் பொறுத்த வரையிலே சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் தான் அதிபராக வரக்கூடிய சூழலில், தமிழர்களாகிய எமது வாக்குகள் உங்களுக்கு உங்கள் சமையலை வாசனையாகவும் ருசிகரமாகவும் மாற்றுகின்ற கறிவேப்பிலையை போன்று தான் இருக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிந்த படியினால், இம்முறை தேர்தல் களத்திற்கு வருகின்ற நீங்கள் முன்மொழிகின்ற உங்களது தேர்தல்  விஞ்ஞாபனத்தின்  முன்னோடியில், ஈழத் தமிழர்கள் பிரச்சினை விடயத்தைத் தமிழர்களது வேணவாக்களின் அடிப்படையில், நாங்கள் நிரந்தரமாகத் தீர்த்து வைப்போம் என்று  நீங்கள் பிரசுரிக்க  கூடிய தைரியம் இருந்தால் அவ்வாறான விஞ்ஞாபனத்துடன் நீங்கள்  களத்திற்கு  வாருங்கள். அவ்வாறானவர்களை  ஆதரிக்க ஒருபோதும் தமிழர்காகிய நாம் பின் நிற்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாகத் தென்னிலங்கைச் சிங்கள மக்களை வார்த்தை ஜாலங்களால் வசியப்படுத்திவரும் அனுர குமார திசாநாயக்க, லைன் வீடுகளின் அளவுப் பரிமாணங்கள் பற்றிப் பேசி முதலைக் கண்ணீர் வடிக்கும் அவரது வார்த்தை ஜாலமும், நாம் எல்லோரும் இணைந்து புதியதொரு அரசியல் கலாச்சாரத்துடனான நாட்டைக் கட்டியெழுப்புவோம் வாருங்கள் எனும் அவரது தந்திரோபாயமும், இலங்கையின்  மலையகம் மற்றும் வடக்குக் கிழக்குப் பிரசேங்களில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் ஈழத்திழினத்திடம் பலிக்கும் என்று பகற் கனவு காண்பதை நிறுத்தி விட்டு, அவர் காணும் கனவு போல் ஈழத் தமிழர்கள் எடுபட்ட காலம் மலையேறிப் பல ஆண்டுகள் கழிந்து விட்டன என்பதே அவர் முன் விஸ்வரூபம் எடுத்திருக்கும் யதார்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள  வேண்டும்.

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் ஆகிய நாம் வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே அல்ல யாப்பு மாற்றம் ஊடாக இரு இனங்களும் அவர் அவர்கள் விரும்பும் படியான சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களாக இனப்பிரச்சினைகள் முறையாக தீர்வு காணும் வகையில் தீர்வு திட்டங்களை முன் நிறுத்தும் அதேவேளை சக்தி மிக்க பொருளாதார கட்டமைப்பை உருவாக்க கூடிய ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல  கூடிய தரப்பினரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து நிற்க ஒருபோதும் தயக்கம் காட்டவும் மாட்டோம் என்று இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்தி நிற்கின்றோம் – என அவர் வெளியிட்டுள்ள அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews