தொழுகை செய்த இலங்கை உள்ளிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களால் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தாக்குதலினால் இலங்கையை சேர்ந்த மாணவர் ஒருவரும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 20 முதல் 25 பேர் அடங்கிய குழுவினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒன்பது காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் சுமார் இருபது பேர் நுழைந்து, வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் தொழுகை நடத்துவதற்கு ஆட்சேபனை எழுப்பியபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழகத்தின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆபிரிக்கா உட்பட நாடுகளின் சுமார் 300 சர்வதேச மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews