கற்பிட்டியில் திடீரென மாயமான மீனவர்கள் இரண்டு நாட்களின் பின்பு மீட்பு…!

கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடந்த 6 ம் திகதி மூன்று பேருடன் கடலுக்குள் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு மற்றும் அதில் பயணித்த மீனவர்கள் மூவரும் நேற்று (08) பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி கடலில் இருந்து மூவருடன் புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் 6 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் இயந்திர படகுடன் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்களும் இரண்டு நாட்களின் பின்னர் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறு காரணமாக குறித்த இயந்திர படகு இயங்காமல் போனதாகவும், பின்னர் கடலில் மிதக்க ஆரம்பித்த குறித்த படகு, இந்திய கடல் எல்லையோரம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.
குறித்த மூன்று மீனவர்களும் உணவு, குடிநீர் இன்றி இரண்டு இரவுகளை கடலில் கழித்துள்ளதாகவும், இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர்கள் இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் என்பவற்றை வழங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews