யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் ஐவரடங்கிய குழு இன்று (01.03.2024) நியமிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்  உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (29.02.2024) நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய தீர்வுகளை வழங்குவதற்கு குழு நியமிக்கப்படும் என கௌரவ ஆளுநர் அறிவித்தார்.
இன்று நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவின் ஊடாக யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களை இணைந்த நேர அட்டவணைக்கு அமைய தூர சேவைகளில் எவ்வாறு ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை ஒரு வாரத்திற்குள் கௌரவ ஆளுநருக்கு சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews