பெண்களை நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக நாம் மாற்றுவோம் – சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில் பெண்களால் தேவேந்திர முனையிலிருந்து பேதுரு முனை வரை சிரமமின்றி பயணிக்க முடியுமாக இருந்தாலும், இன்று நாட்டில் அவ்வாறான தொரு நிலை இல்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

2023 இல் மட்டும் இவ்வாறு 9400 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1502 பாலியல் துஷ்பிரயோகங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். நமது நாட்டில் பெண்களுக்கு பரிதாபகரமானதும் துயரமானதுமான நிலையே நிலவி வருகிறது.  இது மாற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் சரியான பாதுகாப்பு, பொருத்தமான சூழல் மற்றும் கவனிப்பு இல்லாத காரணத்தால் தொழிலாளர் பரப்பில் 34% பணியாளர்களே பெண்களாக உள்ளனர். பெரும்பாலான பெண்கள் வீட்டிலும், போக்குவரத்தின் போதும், பணியிடத்திலும் பன்முக துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பொருளாதார நெருக்கடி கூட பெண்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீட்டின் தெய்வம் தாய் என்று அழைக்கப்பட்டாலும், குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தாய் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை கடுமையான பிரச்சினையாக இன்று மாறியுள்ளன. மகளிர் தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதில் வாக்குறுதியளிக்கப்பட்ட எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் பெண்களைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், பெண்களுக்கு மட்டுமான தனியான சாசனத்தை தான் தயாரித்ததாகவும், இன்றைய அரசியலிலும் ஜனநாயகத்திலும் முக்கிய அடிமட்ட சக்தியாக பெண்கள் கருதப்பட்டாலும், பெண்கள் தற்போது வெறுமனே அரசியல் ஆயுதமாக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் உள்ள 52% பெண்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து விரிவுரைகளையோ,வியாக்கியானங்களையோ எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பதில்களையுமே எதிர்பார்க்கின்றனர். எனவே புகழ்ச்சிக் கதைகள்,வாய் வீறாப்பு கதைகளைக் கண்டு, கேட்டு ஏமாற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கண்டியில் இன்று(24) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்ணுக்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும் எனவும், நாடளாவிய ரீதியில் உள்ள பெண்களை தொடர்பு கொண்டு அவருக்கு பக்க பலத்தை வழங்கும் மகளிர் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு கிராம சேவை அலுவலர் பிரிவுக்கும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்க தேசிய போஷாக்குக் கொள்கை ஸ்தாபிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews