கட்சி ஆரம்பித்த விஜய்-பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

இந்திய சினிமா நட்சத்திரம் இளைய தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

“தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கி, தனது கட்சியின் பெயரை புதுடெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்”

ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச, ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும் .

இதேவேளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும் எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews