ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்க்கு தயாராகும் பல்கலைக்கழகங்கள் …!

சகல பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கும்,
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில்;
18.01.2024 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் – விசேட பொதுக்கூட்டமும்அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் 14.01.2024, 15.01.2024 ஆகிய தினங்களில் இடம்பெற்ற கூட்டங்களின் தீர்மானத்திற்கமைவாக 16.01.2024 கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் நாளை வியாழக்கிழமை 18.01.2024, அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் 18.01.2024 வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் அன்றையதினம் அவ்வவ் பல்கலைக்கழகங்களின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் நாளை 18.01.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது. அத்துடன் அன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் முன்றலில்  காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் நடாத்துவதுடன் தொடர்ந்து  விசேட பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது என்பதனை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.

எனவே பாதுகாப்பு பணியாளர்கள் தவிர்ந்த அனைத்து அங்கத்தவர்களும் 18.01.2024 வியாழக்கிழமை காலை பணியிடங்களுக்குச் செல்லாது, காலை 09 மணிக்கு இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு வேண்டப்படுவதோடு, தவறாது ஊழியர் சங்க வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவது அவசியமானது என்பதையும் வலியுறுத்துகின்றோம். மேலும் அன்றைய தினம் நடைபெறும் விசேட பொதுக் கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

த.சிவரூபன்
இணைச்செயலாளர்
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Recommended For You

About the Author: Editor Elukainews