நல்லூரில் தியாகி திலீபனுக்கு பொலிஸ் பாதுகாப்பு! –

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியின் முன்றலில் யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒறுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.

1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த 34ஆவது ஆண்டு நினைவு வாரம் கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் நினைவேந்தல் தூபிக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈகச்சுடர் ஏற்றி, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews