தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம்…!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக வியாழக்கிழமை (09.11.2023) பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகளை வழங்கியுள்ளது.
பாடசாலை அதிபர் ச. விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டு மரநடுகையில் மாணவர்களின் வகிபாகம் குறித்து உரையாற்றியதோடு, மரக்கன்றுகளையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்குக் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்துவரும் பெங்களுர் அல்சூர் றோட்டரிக் கழகத்தினரும் பங்கேற்றிருந்தனர்.
கறுவா மரம் தென் இலங்கையில் காணப்படுகின்ற இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஒரு தாவரம் என்பதோடு பெருமளவு அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் வர்த்தகப் பயிராகவும் விளங்குகின்றது. இதன் பொருளாதாரப் பயன்கருதி அண்மைக்காலமாக வடக்கிலும் கறுவாச் செய்கை முக்கியத்துவம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews