பொருளாதார மந்த நிலையின் போது தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை இலங்கை தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்! – செந்தில் தொண்டமான்

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா இலங்கையிலும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என   கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் சென்னையில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் அவர் கூறியதாவது;

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நீங்கி பழையை நிலை திரும்பும். பொருளாதார நெருக்கடியை சீரமைக்க  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொருளாதார மந்த நிலையின் போது தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை இலங்கை தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

மேலும் இலங்கை தமிழர்கள் மீது அதீதமான பற்று கொண்டவர் மறைந்த முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி. அவர் இலங்கை மக்களுக்காக ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். தமிழ்நாட்டை போலவே இலங்கை கிழக்கு மாகாணத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும்.

இவ்வாறு இலங்கை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews