பொது மன்னிப்பில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்!

கடந்த 15  ஆண்டுகள் தமிழ் அரசியல்  கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றி வந்திருந்தபோது கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இவர் மீது தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்குகளிலும் முறையே, ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆண்டுகால சிறை தண்டனை என கொழும்பு மேல் நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பளித்திருந்தது. தனக்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில், தனக்காக தானே மன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்த தேவதாசன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை ஆட்சேபித்து மேல் முறையீட்டு நீதிமன்றில் மேல் முறையீடு செய்திருந்தார். இவ்வாறான நிலையில், அவர் தீடிரென தோல் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு  இரண்டு தடவைகள்  சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிறைச்சாலை தடுப்பில் இவருக்கு, பொருத்தமான மருத்துவமோ போஷாக்கான உணவுகளோ கிடைப்பதற்கு வழியிருக்கவில்லை. இவரது துன்பகரமான இந்த நிலையினை குரலற்றவர்களின் குரல் அமைப்பினராகிய நாம்,பல தரப்புகளுக்கும் தெரியப்படுத்தி விடுதலைத் தீர்வுக்கு விரைந்து வழி  வகுக்குமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வந்திருந்தோம் .அதற்கமைய ,பல்வேறு தரப்புகளினதும் கூட்டு முயற்சியின் பயனாக 23.06.2023 தேவதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரசின் இந்த மனித நேய செயலாற்றலை வரவேற்கின்ற அதே நேரம், மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரி நிற்கிறது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள தேவதாசனுக்கு மேற்கொள்ளவேண்டிய வைத்திய சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு  நடவடிக்கை  எடுத்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நலன்களுக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews