திருமணத்திற்கு தைக்க கொடுத்து திருமணம் முடிந்தும் தைக்கப்படாத ஆடைகளை திருப்பி கேட்ட மணமகனுக்கு தும்புக்கட்டை அடி!

திருமணத்திற்காக தைக்க கொடுத்திருந்த ஆடைகள் திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்கப்படாததால் ஆடைகளை திருப்பி கேட்ட மணமகனை தையல் கடைக்காரர் தும்புக்கட்டையால் அடித்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக அப்பகுதியில் உள்ள தையலகம் ஒன்றில் ஆடைகளை தைக்கக் கொடுத்திருந்தார்.

தையல்காரர் ஆடைகளை சொன்ன திகதிக்கு தைத்துக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இளைஞனுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட, அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவியுடன் சென்று தைக்கக் கொடுத்த ஆடைகளை வாங்கி வருவதற்காக தையலகத்துக்கு இளைஞர் சென்றுள்ளார்.

அப்போதும் அவரது ஆடைகள் தைக்கப்படவில்லை. அதனால் இளைஞனுக்கும் தையல்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, கடையில் இருந்த தும்புத்தடியினால் இளைஞனை அவரது மனைவி முன்னிலையி‍லேயே தையல்காரர் தாக்கியுள்ளார்.

இதன்போது காயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது, தன்னையும் இளைஞன் தாக்கியதாக தெரிவித்து தையல்காரரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews