யாழில் சோடாப்போத்தல்களின் திகதி மாற்றம் செய்தவரின் வியாபார அனுமதியை ரத்து செய்ய நீதிமன்றம் பரிந்துரை!

சோடாப்போத்தல்களின் காலாவதி திகதியில் மாற்றம் செய்த விநியோகஸ்தரிற்கு 110,000/= தண்டத்துடன் வியாபார அனுமதியை இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகர ஆணையாளரிற்கு நீதிமன்றம் பரிந்துரை…

கடந்தமாதம் 26.04.2023 அன்று யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் ற்கு திகதியில் மாற்றம் செய்து சோடாப்போத்தல்கள் யாழ்நகர் கடைகளிற்கு விநியோகிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து யாழ்நகர் கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்து மற்றும் திகதி காலாவதியான சோடாப்போத்தல்கள் விநியோகஸ்தரால் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து கடைகள் 02 ற்கு விநியோகிக்கப்பட்ட சோடாப்போத்தல்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த விநியோகஸ்தரின் வைமன் வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையினை முற்றுகையிட்டு திடீர் பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்த 1100 சோடாப்போத்தல்கள் விநியோகத்திற்காக தயார் நிலையில் இருந்த போது கைப்பற்றப்பட்டதுடன், திகதி காலாவதியான சோடாப்போத்தல்களும் என மொத்தம் 1710 மனித பாவனைக்கு உதவாத சோடாப்போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து குறித்த விநியோகஸ்தரிற்கு எதிராக யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் கடைகளிற்கு விநியோகம் செய்தமை தொடர்பில் 02 வழக்குகளும், பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபனால் களஞ்சியசாலை குறைபாடுகளுக்காக ஓர் வழக்கும் என 03 வழக்குகள் இன்றையதினம் 24.05.2023 மேலதிக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 03 வழக்குகளுக்கும் குறித்த விநியோகஸ்தரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 110,000/= தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன் யாழ் மாநகர சபையால் குறித்த விநியோகஸ்தரிற்கு வழங்கப்பட்ட வியாபார அனுமதியை இரத்து செய்வதற்குரிய பரிந்துரையினை, 03 வழக்குகளிற்கும் தனித்தனியே யாழ் மாநகர சபை ஆணையாளரிற்கு வழங்கி கட்டளை நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews