கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட 9பேர் கைது

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, இடைத் தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கைது நடவடிக்கை இன்று (19.05.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம், குறித்த தரகர்கள் பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

வரிசைகளில் காத்திருக்காமல், உரிய நடைமுறைகளுக்கு அப்பால், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயை சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனைகள் தொடரும் எனத் தெரிவித்த அமைச்சர் திரான் அலஸ், கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எவரேனும் கண்டறியப்படுவார்களாக இருந்தால்  அவர்களிடமும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews