மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் தோணியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15) மாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கல்முனை பாண்டிருப்பு எல்லை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய உதயராஜன் தனேஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து கல்லடி பிரதேசத்தில் திருமணம் முடித்து 3 மாதங்களான நிலையில் அடுத்தவாரம் திரும்பி வெளிநாட்டுக்கு செல்ல உள்ள நிலையில் சம்பவதினமான நேற்று மாலை மனைவியாரின் உறவினர்களான இருவருடன் சேர்ந்து 3 பேரும் கல்லடி வாவியில் தனியார் விடுதிக்கு முன்னாள் தோணியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்ததில் குறித்த நபர் நீரில் மூழ்கியதையடுத்து அவரை அங்கிருந்து காப்பாற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் வீதியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews