வவுனியாவில் ‘டெல்டா’ தாண்டவம்! – 50 பேருக்குத் தொற்று உறுதி…!

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் சில நேற்றிரவு வெளியாகின.

அதில் செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு என்பவற்றில் 15 பேர் டெல்டா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றுமுன்தினம் 35 பேர் டெல்டா வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்ட நிலையில், மேலும் 15 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் வவுனியா மாவட்டத்தில் 50 பேர் டெல்டா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் அடைவதால் மக்கள் விழிப்புணர்வுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews