தமிழக அரசிடம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தலையிடாததற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 109 மீன்பிடி படகுகள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் கடற்றொழிலாளர்களுடன் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் அவர்களின் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், நீதிமன்றக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், படகுகள், வலைகள் மற்றும் பிடிபட்டவை திரும்பக் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் சங்க தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த படகுகளை விடுவிக்க மத்திய அரசுடன் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் ஸ்டாலினிடம் கோரியுள்ளனர்.

மேலும் பல மாதங்களாக பலருக்கு வேலை இல்லாததால் கடற்றொழிலாளர்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தங்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews