மட்டக்களப்பில் 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை 3 மாதத்தில் 38 பேர் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில்  3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறுவர் தொடக்கம் 76 வயது வரையிலான ஆண் பெண் உட்பட 38 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  அமிர்தகழி பிரதேசத்தில் 27 வயதுடைய நற்குணராசா கிரிதர்ஷன் என்ற இளைஞன் சம்பவதினமான  நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு  வீட்டின் அறையில் மின்விசிறியில்; தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை அங்கிருந்து காப்பாறி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் மகளுடன் வாழ்ந்துவரும் 76 வயதுடைய தந்தையார் மகளுடன் ஓற்பட்ட சண்டை காரணமாக நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி களுவங்கேணி மயானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அவ்வாறே அதே பொலிஸ் பிரிவிலுள்ள  செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவரும் தனியார் கம்பனியில் கடமையாற்றிவரும் அம்பகஸ்கவ பிரதேசத்தைச் சோந்த 43 வயதுடைய வீரசிங்க என்பவர் சம்பவதினமான நேற்று இரவு தொலைபேசியில் மனைவியுடன் சண்டை பிடித்துவிட்டு அறையில் நித்திரைக்கு சென்றவர் அங்கு கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஜனவரி தொடக்கம் 38 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் அண்மைகாலமாக மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews