முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி கோர விபத்து – பெண் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்று (03) முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த மீராமுகைதீன் பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் இறந்த பெண் அக்கரைப்பற்றில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக காரைதீவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews