நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு

யெடி விமான சேவைக்கு சொந்தமான விமானம் நேபாளம் பொகாரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முற்படும்போது தீப்பற்றி அனர்த்தத்திற்கு உள்ளாகியதில் 68 விமானப் பயணிகள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 68 விமானப் பயணிகளும் நான்கு பணியாளர்களும் விமானத்தில் பயணித்ததாகவும் அவர்களில் ஆறு சிறுவர்களும் 15 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

53 நேபாள பிரஜைகள், 5 இந்திய பிரஜைகள், 4 ரஷ்ய பிரஜைகள், இரண்டு கொரியன் பிரஜைகள் மற்றும் ஆர்ஜென்டினா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரஜைகளும் அந்த விமானத்தில் பயணித்துள்ளதாக குறித்த விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் 200க்கும் மேற்பட்ட படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews