நாடு பெரும் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளது என எச்சரிக்கை!

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகி வருகிறது. இந்நிலையில், பெரும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளவுள்ளது என பல தரப்பினரும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. கடல் சீற்றம் காரணமாக கப்பல்கள் வருவதில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னதாக 38 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய வேண்டும் எனவும் அடுத்த வருடம் அதிக நேர மின்வெட்டுக்கு செல்லாமல் இருக்க அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி ‘பிளாக்சான்ட்’ எனப்படும் நிறுவனத்துக்கு நிலக்கரி தொடர்பான விலை மனுவை வழங்கும்போது இலங்கை நிலக்கரி நிறுவனம் உரிய நடைமுறையை பின்பற்றாமையால் குறித்த விலைமனு இரத்து செய்யப்பட்டது. ஆறு மாத கால கடன் அடிப்படையில், இந்த விலைமனு வழங்கப்படவிருந்தது. கொடுக்கல் வாங்கல் இரத்தானதையடுத்து, இலங்கை நிலக்கரி நிறுவனத்தால் மீண்டும் நீண்டகால மற்றும் குறுகிய கால இரண்டு விலைமனுக்கள் கோரப்பட்ட போதிலும் அவற்றில் ஒன்றுகூட வெற்றியடையவில்லை.

இதனால் பழைய விநியோகஸ்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவிருந்த நிலக்கரியை ஏற்றிய 21 கப்பல்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. இதனிடையே, கடந்த வருடம் நிலுவையான பணத்தையும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டியேற்பட்டதுடன், அந்த நிறுவனத்திற்கு மேலும் 14 மில்லியன் டொலர் பணத்தை செலுத்த வேண்டிய நிலையை இலங்கை நிலக்கரி நிறுவனம் எதிர்கொண்டது.

தற்போதைய நிலையில், கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாட்டில் ரூபாயோ அல்லது டொலரோ இல்லையென இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதம் 6 கப்பல்கள் வீதம் அடுத்த தவணைக் காலத்துக்கு முன்பாக நிலக்கரிக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், தற்போது 12 கப்பல்களை நாட்டுக்கு கொண்டுவர வேண்டியுள்ளதாகவும் நிலக்கரி நிறுவனம் சுட்டிக்காட்டியது. எனினும், டொலர் மற்றும் ரூபாய்க்கான நெருக்கடி காரணமாக அவற்றில் அரைவாசியை மாத்திரமே கொண்டு வருவதற்கான இயலுமை உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் கூறியுள்ளது. இதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரியானது எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 2 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை மேலும் 2 நாட்களுக்கு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், டிசெம்பர் 15ஆம் திகதிவரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ருவிற்றர் தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews