நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் எரிபொருள் இருப்பு வலுவான நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தரவுகளின்படி, இன்றைய நிலவரப்படி, 83,236 மெட்ரிக் தொன் ஆட்டோ டீசல், 9955 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல், 20,640 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் 18,354 மெட்ரிக் தொன் ஒக்டேன் பெட்ரோல் 95 பெட்ரோல்கள் என்பன கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 10,022 மெட்ரிக் டன் ஜெட் எரிபொருள் நாட்டின் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல ஜெட் எரிபொருள் கப்பல்களுக்கான பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளின் முழு அளவையும் விநியோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் வலுவான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்கும் செயல்முறை தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறை இந்நிலையில் கியூ.ஆர் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டமையால், எரிபொருள் விநியோக வலையமைப்பு முறையான முகாமைத்துவத்திற்கு உட்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் கொள்வனவுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் எதிர்காலத்தில் கொள்வனவுகள் குறிப்பிட்ட காலகட்ட நடவடிக்கைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews