ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள்! பதறும் உறவினர்கள்

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், படகில் ஏறுவதற்கு முன் சட்டவிரோத பயணத்திற்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, அகதிகள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதொரு சூழலில் மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறதாக வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தொலைபேசி உரையாடலொன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் சட்டவிரோதமாக பயணித்த நிலையில் மீட்கப்பட்ட நபரொருவரின் உறவினர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் (சட்டவிரோதமாக பயணத்தை மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர்) நபரொருவருடன் உரையாடும் ஒலிப்பதிவே இவ்வாறு வெளியாகியுள்ளது.

அதில் பாதிக்கப்படவரின் உறவினரொருவர் தனது சகோதரன் தொடர்பில் மிகவும் பதற்றமாக வினவுகின்றார். அடுத்த கட்டம் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியும் அவர் கேள்வியெழுப்புகிறார்.

என்ற போதும் எதிர்த்தரப்பில் பதிலளிப்பவர் மிகவும் சாதாரணமாக, கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்டவர்கள் அமெரிக்காவிற்கு செல்வார்கள் என கூறுகிறார். அத்துடன் பாதிக்கப்பட்டவரின் உறவினர் கேட்கும் கேள்விகளுக்கு சமாளிக்கும் வகையில் பதில் தெரிவிக்கிறார்.

இந்த குரல்பதிவானது சமூக வலைத்தளங்களை சேர்ந்த பலரையும் கொதித்தெழ வைத்திருக்கிறது. இவ்வாறான கடத்தல்காரரர்கள் பணத்தை பெற்றுக் கொள்வதை மட்டுமே நோக்கமாக வைத்துள்ளார்கள்.

எனினும் பணத்தை கொடுத்து விட்டு அடுத்த நொடி நிச்சயமில்லாத நிலையில் ஆபத்தை கடக்க வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். எனவே இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களை நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews