இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள இலங்கை! அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்வெட்டு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அந்தச் சவாலை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கவில்லை. நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தேர்தலுக்குச் செல்லுமாறு கோருகின்றனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தல் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தேர்தலுக்குச் செல்லாமல் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு மே மாதம் கொடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் விரும்பினால், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அவர்கள் அதிகாரத்தை ஏற்று அரசாக பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

எனினும், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை காரணமாக அந்த சவாலை அவர்கள் ஏற்கத் தயங்கினார்கள்.

நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்வெட்டு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அந்தச் சவாலை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கவில்லை. நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தேர்தலுக்குச் செல்லுமாறு கோருகின்றனர்.

தற்போது, IMF பிணை எடுப்பு தொகுப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான முறையான வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றது, தேர்தலை நடத்தி அதனை நாசப்படுத்த முடியாது.

நாட்டை சீர்குலைக்க விரும்புபவர்கள் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருகின்றனர். அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முன்னர், முதலில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

அதன் பிறகு தேர்தலுக்கு செல்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்னும் நாடு தேர்தலுக்குச் செல்வதற்கான நிலையான நிலையில் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை மற்றும் கடன் மறுசீரமைப்பு சரிந்தால், நாடு மீண்டும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Recommended For You

About the Author: admin