![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/20210819_123642-818x490.jpg)
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரிடம் ஒரு தொகைப் பணத்தை கடனாக பெற்றிருந்தார். கடன் பணம் இதுவரை திருப்பி கொடுக்காத நிலையில் குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி, பிள்ளைகளுடன் வவுனியா நகர் நோக்கி காலை முச்சக்கர வண்டியில் சென்றிருந்தார். இதன்போது, வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் குடும்பஸ்தரை வழிமறித்த சில நபர்கள் அவரது மனைவியையும், பிள்ளையையும் அவ்விடத்தில் விட்டு விட்டு வெள்ளை வான் ஒன்றில் குடும்பஸ்தரை ஏற்றிச்சென்றுள்ளனர். இதன்போது வாகன இலக்கத்தை குறித்துக் கொண்ட மனைவி வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிஸார் குறித்த வானையும், குடும்பஸ்தரையும், வானில் இருந்த ஆறு பேரையும் வவுனியா வெளிக்குளம் பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர். இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது