இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆட்டம் ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) கடந்த வியாழன் அன்று இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, போர் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையின் இராணுவ உறுப்பினர்களுக்கு, பேரவையின் உறுப்பு நாடுகளால் உடனடி பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டமாக கனடா, குறைந்தது மூன்று அதிகாரிகளை பெயரிடும் என்று ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும் பின்பற்றி இலங்கையின் இராணுவ உறுப்பினர்களுக்கு தடைகளை விதிக்கவுள்ளன.

ஜெனிவாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் பேரவை, கடந்த வியாழன் அன்று “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 20 நாடுகள் வாக்களிக்கவில்லை, ஏழு நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.

முந்தைய தீர்மானங்களைப் போலல்லாமல், கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடுமைத்தன்மையை கொண்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் குறித்து கணிசமான கவனம் செலுத்தப்பட்டது.

இது ஊழலைக் கையாள்வதோடு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த போராட்டக்காரர்களை, அரசாங்கம் கையாண்ட விதம் குறித்தும் அரசாங்கத்தை, இந்த தீர்மானம் விமர்சித்துள்ளது.

தீர்மானத்தின்படி, மனித உரிமைகள் ஆணையரின் கீழ் செயல்படும் புதிய செயலகம், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் புதிய தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் விசாரணை செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin