யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு..!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா 2022 ஐப்பசி 06,07,08 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றது.

07.10.2022 அன்று நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.

இதன்மூலம்  அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு மொனராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு ஏகாந்த நிலையில் வழகப்பட்டது.

முன்னய ஆண்டுகளில் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி முனியப்பன் துலாபரணி,  யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமார், யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த  தினேஸ் விஜயதர்சினி ஆகியோர் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொள்ளும்  செல்வராஜா ரமேஸ் மதுசங்கவுடனான கருத்துப் பகிர்விலிருந்து……,

எனது பெயர் செல்வராஜா ரமேஸ் மதுசங்க. நான் புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும் கிராமத்தை பிறப்படமாகக் கொண்டுள்ளேன். நான் எனது ஆரம்பக் கல்வியை சிலா/ குசலை தமிழ் வித்தியாலத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் எட்டு வரை பயின்று வந்தேன். பின் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையையும் உயர்தர பரீட்சையையும் சிலா /சென.பெர்னதேத் தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன் உயர்தர பயிற்சியில் சித்தியடைந்த பின் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. எனக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் ஊடகக் கற்கைகள் மற்றும் உளவியலையும் பயின்று வந்தேன் இரண்டாம் வருடத்தில் இருந்து ஊடகக் கற்கைகள் துறையை சிறப்பு கலையாக தெரிவு செய்தேன்.

ஊடகக் கற்கள் துறையை சிறப்பு கலையாக தெரிவு செய்யும் போது சிறு அச்சம் என்னில் ஏற்பட்டது . பின் விரிவுரையாளர்களின் கற்பித்தல் நுட்பங்களும், எமக்கான வழிகாட்டல்களை வழங்கி அனுசரித்ததால் விருப்பத்துடன் கற்பதற்கான ஆர்வம் என்னுள் ஏற்பட்டது.

ஊடகக் கற்கள் துறையில் பாடவிதானத்தோடு செயல்முறை ரீதியான கற்கையும் காணப்பட்டது. கமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தல் ,சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதுதல் ,ஆவணப்படம் தயாரித்தல் ,பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுதல் போன்றவற்றை அனுபவரீதியாக செயல்படுத்துவதற்கான தளத்தை ஊடகக் கற்கைகள் துறையால் பெற்றுக் கொண்டேன் . அத்தோடு இறுதியாண்டில் தொழில்துறை சார்ந்த பயிற்சி பெற்றுக் கொண்டதும் மிகப்பெரிய வாய்ப்பு இன்றே கூறலாம். விரிவுரைகளுக்கு அப்பால் ஊடகத்துறை சார்ந்தவர்களின் அனுபவப்பகிர்வுகள் மற்றும் ஊடகப் பயிற்சி கருத்தரங்குகளில் பங்கு பற்றியமை போன்றனவும் எமக்கான மேலதிக அறிவையும் அனுபவத்தையும் பெற்று தந்தது.

தற்போது ஊடகக் கற்கைகள் துறையை சிறப்புக் கலையாகக் கொண்ட பலர் இன்றும் பல ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இதே போல் நானும் ஊடகத்  துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருக்கின்றது . எனவே எமக்கான வழிகாட்டிகளாக நின்ற  ஊடகக் கற்கைகள் துறையின் துறை தலைவர் பேராசிரியர் சி. ரகுராம் அவர்களுக்கும் விரிவுரையாளர்களான திருமதி. பூங்குழலி சிறீ சங்கீரத்தனன், திரு.யூட் தினேஸ் கொடுதோர் மற்றும் திருமதி அனுதர்ஷி கபிலன் ஆகியோருக்கும் எனக்கு கற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க உதவியாய் இருந்த எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன் .அத்தோடு அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்து கௌரவிக்கும் நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Recommended For You

About the Author: admin