ஜெனீவா களத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களில் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுக்கள் முதன்முறையாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களாக அமைந்துள்ளன.

பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களில் ராஜபக்சவினர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கம் அதற்கு பதிலளிக்கும் என்று உயர்ஸ்தானிகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2016 இல் ரணில் பிரதமராக இருந்தபோது, பரிந்துரைத்த தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான தேசிய ஆலோசனை பணிக்குழு இதில் முக்கிய பங்கை வகிக்கும் என்றும் ஆணையாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நாளை ஆரம்பமாகும் 51வது அமர்வில், பிரித்தானியாவை தலைமையாக கொண்ட இலங்கை தொடர்பான முக்கிய குழு முன்வைக்கும் புதிய வரைவுக்கு குறைந்தது 22 நாடுகள் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த குழுவில், அமெரிக்கா உட்பட்ட நாடுகள் உள்ளடங்கியுள்ளன. இதேவேளை இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை முன்னெடுக்க, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் உதவியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் குற்றவியல் நீதிப்பிரிவு மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அரசியல் பொருளாதார அதிகாரி சூசன் வால்கேயும் இந்த தீர்மானத்துக்கு ஜெனீவாவில் தங்கியிருந்து உதவுகின்றார்.

எனவே இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மனித உரிமைகள் நெருக்கடியையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin