ஐ.நா.வில் பிரித்தானியா தலைமையில் புதிய பிரேரணை : அமெரிக்காவும் இணை அனுசரணை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது.

பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்படவுள்ள இந்தப் பிரேரணைக்கு அமெரிக்கா, கனடா, ஜேர்மன், வடக்கு மசிடோனியா, மலாவி, மொண்ரி நீக்ரோ ஆகிய நாடுகள் இணை அனுரணை வழங்கவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட 46.1 பிரேரணை இந்தக்கூட்டத்தொடருடன் காலவதியாகவுள்ள நிலையில் புதிய பிரேரணையொன்றை மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை நாடுகள் தீர்மானித்துள்ளன.

இந்தப் பிரேரணையானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டு வரும் பிரேரணைகளின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கவுள்ளதோடு விசேடமாக 46.1பிரேரரணையின் உள்ளடகத்தில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள் காலநீடிப்புடன் உள்ளீர்க்கப்படவுள்ளன.

குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 8 அங்கத்தவர்களைக் கொண்ட பொறிமுறையானது புதிய பிரேரணையிலும் உள்வாங்கப்படவுள்ளதோடு அதற்கான நிதி மற்றும் வினைத்திறனான செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிடப்படவுள்ளது.

அதேநேரம், இலங்கையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக நடைபெற்ற அடக்குமுறைகள் பற்றிய விடயங்களும் உள்வாங்கப்படவுள்ளதோடு அவசரகால நிலைமை மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டமை, தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் அமுலாக்கப்படும் என்றும், அதுவரையில் அத்தடைச்சட்டத்தின் கீழ் எவரையும் கைது செய்வதில்லை என்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அதே சட்டத்தினைப் பயன்படுத்தி கைதுகள் இடம்பெறுவது தொடர்பாகவும் விசேட கரிசனை கொள்ளப்படவுள்ளது.

மேலும், தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னேற்றகரமானதாக இடம்பெறவில்லை என்பதோடு நீதியைக் கோரும் பயணத்தில் தொடரும் போரட்டங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வுபற்றிய விடமும் புதிய பிரேணையில் உள்வாங்கப்படவுள்ளதோடு, அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவது பற்றிய வலியுறுத்தலும் செய்யப்படவுள்ளது.

இதனைவிடவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கபடாமையினால் அதன் பின்னணி குறித்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான பரிந்துரை செய்யப்படுவதற்கும் சாத்தியமான நிலைமைகள் காணப்படுகின்றன.

வரைவுப்பணி இந்நிலையில், தற்போது இலங்கை குறித்த பிரேரணையின் வரைவுப்பணிகள் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மெய்நிகர் வழியில் பங்கேற்று வருகின்றார்.

இந்நிலையில், குறித்த வரைவுப்பணியானது விரைவில் நிறைவடையவுள்ளதோடு 51ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் காலப்பகுதியில் மேலதிக விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டு, அரசியல் மற்றும் சிவில் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கலந்துரையாடல் இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான தலைமை பிரதிநிதியாக 2007ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வரும் ரொரி மங்கோவனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, புதிய பிரேரணையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும், கடந்த காலத்தில் நிறைவேற்றப் பட்ட பிரேணையிலிருந்து உள்ளீர்க்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுசரணை மற்றும் உறுப்பு நாடுகளுடன் உரையாடல் இதேவேளை, இலங்கை குறித்த புதிய பிரேiணையைக் கொண்டுவரவுள்ள பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரனை நாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் ஆகியவற்றுடனும் தொடர்ச்சியான உரையாடல்கள் இடம்பெற்று வவருதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளில் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சியடைந்து போராட்டங்களை முன்னெடுத்தபோது அதனை கட்டுப்படுத்துவதற்கு ஜனநாயக விரேதமான செயற்பாடுகளை பின்பற்றப்பட்டள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.

மேலும், தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் ஆணையை இழந்தவர் என்பதோடு, அவர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அடக்குமுறைகளை பிரயோகித்து வருகின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விசேடமாக, ரணில் விக்கிரமசிங்க, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும், அதனை தொடர்ந்து பயன்படுத்தப்போவதில்லை என்று ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச தரப்பினருக்கு பிரதமராக பதவிவகித்தபோது வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தற்போது, தனது அதிகாரத்தினை தக்கவைப்பதற்கான அச்சட்டத்தினை மிக மோசமான முறையில் பயன்படுத்தி வருகின்றமையையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews