கல்முனையில் சொகுசு கார்களில் போதைப்பொருட்கள் கடத்திய இருவர் கைது

நீண்டகாலமாக சொகுசு கார்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நேற்று(27) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்திற்கருகில் விசேட அதிரடிப்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது 6 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் 580 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 4 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதீப் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்று பொருட்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படுவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin