எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது….! 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும் நாச்சிகுடாவுக்கும்   இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதில் ஒரு படகையும் அதிலிருந்து ஐந்து மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக மீனவர் தெரிவித்ததையடுத்து படகை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகையும்  அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தூதர் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகையும் அதிலிருந்த பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி,  அஜித், கிருஷ்ணன், மடுகு பிச்சை ஆகிய ஆறு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர்  தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சிறைபிடிக்கப்பட்ட   ராமேஸ்வரம் மீனவர்களிடம்  இலங்கை கடற்படையினர்  நடத்திய  முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் ஆறு மீனவர்களும் தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை மக்கள் அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு தனுஷ்கோடி வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து வரும் நிலையில் தற்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஆறு ராமேஸ்வரம்  மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில்  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள்
மத்திய, மாநில அரசுகள் ஊடக இலங்கை அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews