நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்புக்காக போராட இணைகின்றன தமிழ் கட்சிகள்!

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, பாராளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள முறைமையை வலியுறுத்தி தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முன்னோடி கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்வை  தமிழ் தேசிய கட்சி முன்மொழிந்திருந்தது. அநேகமான தமிழ் கட்சிகள் இதனை ஏற்றுக் கூட்டு நகர்வாக திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்து.

முதல்கட்டமாக தமிழ் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், மற்றும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு கலந்துரையாடல் அழைப்பு விடுக்கப்பட்டது.

எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறும். அனேகமாக 18ஆம் திகதி முதலாவது பேரணி வடக்கின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யலாமென, ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா இதுபற்றி குறிப்பிடுகையில், “பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட இலங்கையின் அனேகமாக பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பதற்கு நிறைவேற்றதிகார ஆட்சிமுறை ஒழிப்பது முக்கியம். நிதி பொறுப்புக்கூறும் ஓர் அமைப்பு முறை உருவாக வேண்டும். பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்குவதே பொருத்தமானது.
இது முழு நாட்டுக்கும் நல்லது. சிறுபான்மையினருக்கு விசேட நன்மைகள் உள்ளன. நிறைவேற்றதிகார முறைமை அல்லாத பாராளுமன்ற ஆட்சி முறை, சிறுபான்மையினருக்கு இப்போதுள்ளதை விட ஓரளவு பாதுகாப்பான நிலைமையை ஏற்படுத்தும். இந்த அடிப்படையிலேயே, இந்த நகர்வை ஆரம்பித்துள்ளோம் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews