ஏமாற்று நாடகமாடும் கூட்டமைப்பினர் : கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு…!

துரோக நடவடிக்கைகளை மூடிமறைக்கவும், ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ தீர்வாக ஏற்கும் தங்களது துரோக நடவடிக்கை மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அதனை மூடி மறைத்து தங்களது ஏமாற்று அரசியலை தொடர பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையொப்பம் வாங்கி கூட்டமைப்பினர் ஒரு ஏமாற்று நாடகத்தை ஆடுகிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படவுள்ளது. 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு பின்னர் அதாவது 44 ஆண்டுகள் கழித்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்ற பேரில் கோட்டாபய அரசாங்கத்தால் அரசியல் யாப்பு தயாரிக்கப்டபட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், விக்கினேஸ்வரனும் தயாராகி விட்டார்கள். அதற்கான ஒரு முன்னாயத்தமாக மக்களை ஏமாற்றி தயார்ப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தான் கடந்த ஜனவரி மாதம் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கடிதத்தை அவர்கள் மோடிக்கு அனுப்பியுள்ளார்கள்.

1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்ற இதில் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், நீதி அதிகாரம், நிதி அதிகாரம் எதுவும் அற்றதாகவும், வரவு செலவுத் திட்டத்தை கூட சமர்பிக்க முடியாத மற்றும் சட்டங்கள் எதனையும் இயற்றி நடைமுறைப்படுத்த முடியாத 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு வார்த்தையைப் போட்டு ஏமாற்றி அந்த 13 ஆம் திருத்த சட்டத்தையும், மாகாணசபையும் புதிய அரசியலமைப்பில் இருப்பதைக் காட்டி அதனை ஆதரிப்பதற்கு இவர்கள் தயாராகிவிட்டார்கள்.

இது பச்சை துரோக நடவடிக்கை. இந்த சதியை முறியடித்து தமிழ் மக்களுக்கு வடக்கு – கிழக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசம், இறைமை அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி தீர்வு உள்ளடங்கக் கூடிய விதமாக ஒரு அரசியல் யாப்பாக கொண்டு வர வேண்டும் என்ற ஒரு அழுத்தத்தை கொடுக்கும் ஒரு பேரணியை நாம் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என கையொப்பம் வாங்குகிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது எங்களது நீண்டகால நிலைப்பாடு. அதற்காக நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து இருக்கின்றோம்.

இவர்களைப் பொறுத்தவரை இனப்படுகொலையாளிகளுக்கான சர்வதேச விசாரணையை தடுத்து உள்ளக விசாரணையாக மாற்றி இனப்படுகொலையாளிகளை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பலப்படுத்திக் கொண்டு அந்த துரோக நடவடிக்கைகளை மூடிமறைக்கவும், ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ தீர்வாக ஏற்கும் தங்களது துரோக நடவடிக்கை மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதனை மூடி மறைத்து தங்களது ஏமாற்று அரசியலை தொடர ஒரு நாடகத்தை ஆடுகிறார்கள். இதனை எமது மக்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin