என் கணவர் குற்றவாளி என்றால் தண்டியுங்கள்! – மனைவி உருக்கமான கோரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவர் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள்.சந்தேக  நபராக சிறையில் காலத்தை வீணடிக்காதீர்கள் என அவரது மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020 ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எனது கணவரை விசாரணை என்ற அடிப்படையில் வரவழைத்து கைது செய்தார்கள். பின்னர் விடுதலைப் புலிகள் உருவாக்கம் என காரணம் கூறி எனது கணவரை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.

எனது கணவர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் உள்ளடக்கபடுகின்ற சிவில் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றுகின்ற நிலையில் எனது கணவர் தொடர்பான அனைத்து விவரங்கள் தொலைபேசி இலக்கங்கள் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பிடம் இருக்கிறது. இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் என்ற போர்வையில் சந்தேக நபராக எனது கணவரை தடுத்து வைத்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கப்படுகின்றனர் என்றால் அதை காண்பியுங்கள் பார்ப்போம். 30 வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்க்கையில் நான் முன்னாள் போராளியாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியே வந்தேன்.

எங்களுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் யுத்த காலத்தில் நாங்கள் அனுபவித்த வேதனையை விட யுத்தம் முடிவடைந்த பின் அனுபவிக்கின்ற வேதனை அதிகமாக உள்ளது.

எனது கணவர் அவ்விதமான குற்றங்களும் செய்யவில்லை என எனக்கு தெரியும்.குற்றம் செய்திருந்தால் அவர் செய்த குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்குங்கள்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் எனது கணவர் அழைத்து வருவார் என நம்பிக்கையுடன் பல தடவைகளில் காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து ஏமாற்றம் அடைந்தேன்.

எனது கணவரை விடுதலை செய்வதற்காக பல இடங்களுக்கு இறங்கினேன். பயனளிக்கவில்லை. எல்லோரும் உணவுப் பொதிகளை தருகிறோம் என்கிறார்கள். எனக்கு எனது கணவர் தான் வேண்டும்.

20 மாதங்களுக்கு மேலாக எனது கணவரை காரணமின்றி தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கின்ற நிலையில் அவரை விடுவியுங்கள். நீங்கள் வழக்குக்காக அழைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அவரை அழைத்து வருவேன்.

ஆகவே குற்றம் நிரூபிக்கப்படாமல் எனது கணவரை தொடர்ந்தும் சந்தேக நபராக தடுத்து வைக்காமல் விரைவாக விடுதலை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin