தமிழக தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமிழ் அரசியலுக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது என்று அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான
சி.அ.யோதிலிங்கம் தனது வார் அந்த அரசியல் ஆய்வு கட்டுரையில் வெளியிட்டுள்ளார் அதன் முழு விபரமும் வருமாறு
தமிழ் உலகம் ஆவலோடு எதிர்பார்த்த தமிழ்நாட்டு மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. எவரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 ஆசனங்களைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பல தொகுதிகளில் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலையிலும் பாரிய பிரச்சாரங்கள் இல்லாத நிலையிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. அனைத்து வெற்றிக்கும் “விஜய்”; என்ற ஒற்றை நாமமே காரணமாக இருந்திருக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்ராலின் குளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்திருக்கின்றார். தி.மு.க கூட்டணி 73 ஆசனங்களை மட்டும் பெற்றிருக்கின்றது. எனினும் வலிமையான எதிர்க் கட்சியாக இருந்து தமது அரசியலைத் தொடர்வோம் என மு.க.ஸ்ராலின் கூறியிருக்கின்றார்.
தோல்வியடைந்தாலும் அடுத்த நாளே குளத்தூர் தொகுதிக்குச் சென்று திறந்த வாகனத்தில் வீதி வழியாக வாக்களித்த மக்களுக்கு மு.க.ஸ்ராலின் நன்றி தெரிவித்திருக்கின்றார். தி.மு.க.விற்கு தோல்விகள் புதிதல்ல. இதனை உதயநிதி ஸ்ராலினும் “தி.மு.க. பார்க்காத வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை” எனக்கூறியிருக்கின்றார். மிக விரைவில் தி.மு.க. மீண்டெழக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
சீமானின் தாம் தமிழர் கட்சியின் மிக மோசமான தோல்வி தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
அவர் காரைக்குடி தொகுதியில் கட்டுக்காசையும் இழந்திருக்கின்றார். நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும் இழந்துள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எட்டு வீத வாக்குகளைப் பெற்ற கட்சி இத் தேர்தலில் 4 வீத வாக்குகளையே பெற்றிருந்தது. கட்சி அதிகளவு ஆசனங்களைப் பெறும் என்பது பெரிதாக எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் ஒரு சில ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சீமான் தனது தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் அலை அவரை தோற்கடித்து விட்டது. விஜய் அலை இல்லாவிட்டால் சிலவேளை அவர் வெற்றியடைந்திருப்பார்.
அ.தி.மு.க.விற்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் கூட்டணிக்கு 53 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எடப்பாடி பழனிச்சாமி உட்பட முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். பீனிக்ஸ் பறவை போல அ.தி.மு.க. மீண்டும் திரும்பும் என அவர் கூறியிருக்கின்றார்.
பாரதிய ஜனதா கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்ட போதும், ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கின்றது. ஊட்டியில் போட்டியிட்ட போ. ராஜன் வெற்றி பெற்றிருக்கின்றார். மயிலாப்பூரில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் உட்பட ஏனையோர் தோல்விடைந்திருக்கின்றனர். “இத்தோல்வி இந்துத்துவா அரசியலுக்கு தமிழ்நாட்டில் பெரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது.
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எட்டுத் தொகுதிகளில் போட்டியிட்ட போதும் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைத்திருக்கின்றது. தே.தி.மு.க. இல் போட்டியிட்ட நடிகர் விஜயகாந்தின்; துணைவியார் பிரேமலதாவும் வெற்றி பெற்றிருக்கின்றார். அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு மாறிய முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் வெற்றி பெற்றிருக்கின்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த போதும் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசம் கேட்டிருக்கின்றார். ஆட்சி அமைப்பதற்கும் சபாநாயகரை தெரிவு செய்வதற்கும் 119 ஆசனங்கள் தேவை. தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 ஆசனங்கள் மட்டுமே உள்ளது. இன்னமும் 11 ஆசனங்கள் மேலதிகமாக தேவையாக உள்ளது. சிறிய கட்சிகளிடமிருந்து ஆசனங்களைப் பெறுவதற்கு முயற்சித்திருந்தது.
சிறிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்திருக்கிறார்.
ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் 6 மாதத்திற்கு ஆளுநர் ஆட்சியே இருந்திருக்கும்.
விஜய் கட்சி தொடங்கி சிறிது காலம் தான். ஆனால் வலிமையான வெற்றியைப் பெற்றிருக்கின்றார். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் சினிமாக் கவர்ச்சி தான். இந்த சினிமாக் கவர்ச்சி இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பெண்களும் இதனால் கவரப்பட்டிருந்தனர். வாக்களிப்பு வீதம் 80 ஐ தாண்டிய போதே விஜயின் வாக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சினிமாக் கவர்ச்சி எல்லா நடிகர்களுக்கும் தேர்தலில் வெற்றியைத் தராது. வெகுஜன நடிகர்களுக்கு மட்டுமே வெற்றியைத் தரும். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்கு வெற்றி கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெற்றி பெற்றிருக்கின்றனர். சிவாஜியும், கமலஹாசனும், குணச் சித்திர நடிகர்களே ஒழிய வெகுஜன நடிகர்கள்; அல்ல. எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அரசியல் அனுபவப் பின்னணியும் உண்டு. ரஜினி போட்டியிட்டிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். சினிமாக் கவர்ச்சி தமிழ்நாட்டில் அதிகமானது. நாளாந்த வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறி உள்ளது எனலாம்.
நடிகர்கள் சிறந்த தலைவர்களாகவும் வந்திருக்கின்றனர். வரலாற்றில் அது நிகழ்ந்திருக்கின்றது. எம்.ஜி.ஆர்இ ஜெயலலிதா போன்றோர் வலுவான தலைவர்களாக எழுச்சி படைத்திருக்கின்றனர். ஜெயலலிதா தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி என்றே வர்ணிக்கப்பட்டிருந்தார். மத்திய அரசு கையாள்வதற்கு கடினமாக இருந்த பெண்மணிகளில் அவரும் ஒருவர். கையாள்வதற்கு கடினமாக இருந்தபடியால் தான் அவரது மரணமும் நிகழ்ந்தது என்ற ஒரு கதையும் உண்டு. மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேசத்தின் மாயவதி போன்றோரும் இரும்புப் பெண்மணிகளாக இருந்திருக்கின்றனர். ஆந்திராவின் முதலமைச்சராக பதவி வகித்த என்.டி. ராமராவ்வையும் நடிகராக இருந்து சிறந்த தலைவராக வந்த ஒருவராகக் குறிப்பிடலாம். விஜய்யும் முயற்சி செய்தால் சிறந்த தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அரசியல் அனுபவம் விஜய்க்கு பெரிதாக இல்லாவிட்டாலும் செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் பின்னணியில் இருப்பதால் ஆட்சி கடினமாக இருக்கப் போவதில்லை.
இரண்டாவது பாரம்பரிய அரசியலிருந்து மாற்றத்தை விரும்பும் புதிய தலைமுறை தோற்றம் பெற்றிருப்பதாகும். தென்னாசியா முழுவதற்கும் இது ஒரு அலையாக வரப் பார்க்கின்றது. இலங்கையிலும் அந்தத் அலை வந்திருக்கின்றது. பாரம்பரிய அரசியலின் சித்தாந்தத்தில் இருந்து புதிய தலை முறை விலகி நிற்பதே இதற்கு காரணமாகும். இன உணர்வு, மொழி உணர்வு சார்ந்த அரசியலை விரும்பாத போக்கும் வளர்ந்து வருகின்றது. சித்தாந்த தெளிவும், போராட்ட அனுபவம் இல்லாமைமையும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஒரு அரசியல் முன்னேறாமல் தேங்கிக் கிடக்கும்போது அதன் மேல் சலிப்பு வருவது இயற்கையே! தமிழ்நாட்டின் புதிய தலைமுறைக்கு இந்த சலிப்பு வந்திருக்கிறது. சட்டசபை உறுப்பினர்களாக வருபவர்கள் சாகும் வரை உறுப்பினர்களாக இருப்பதற்கே விரும்புகின்றனர். இதனால் புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் சட்டசபை உறுப்பினர்களாக வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகின்றது இதுவும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
மூன்றாவது பாரம்பரிய அரசியல் சித்தாந்தம் செப்பனிடப்பட்டு புதிய தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை. இதனால் புதிய தலைமுறைக்கு வரலாற்று அனுபவம் கிடைக்காமல் போகின்றது வரலாற்று நினைவுகள் தொடர்ச்சியாக கடத்தப்படாமல், அதற்கேற்ற வகையில் புதிய தலைமுறை அரசியல் மயப்படுத்தப்படாமல் பாரம்பரிய அரசியலுக்கு புதிய தலைமுறையின் ஆதரவினை எதிர்பார்க்க முடியாது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தமிழர் தாயகத்திலும் நிலவுகின்றது. அர்ச்சுனாஇ அங்கையன் இராமநாதன் போன்றவர்கள் வெற்றி பெற்றமைக்கும், சிங்கள இனவாதக் கட்சியான தேசிய மக்கள் சக்தி வடக்கில் மூன்று ஆசனங்கள் பெற்றமைக்கும் புதிய தலைமுறை அரசியல் மயப்படுத்தப்படாமையே காரணமாகும்.
புதிய தலைமுறையிடமிருந்து இன்னோர் குற்றச்சாட்டும் வருகின்றது. பாரம்பரிய அரசியல்காறர்களுக்கு புதிய தலைமுறையுடன் பேசுகின்ற மொழி தெரியாமல் இருக்கின்றது. பழைய அதிகாரத் தொனியிலேயே பேச முற்படுகின்றனர். என்பதே அக்குற்றச்சாட்டு. புதிய தலைமுறை அதிகாரத் தொனியை ஒருபோதும் விரும்புவதில்லை. இக்கட்டுரையாளரின் மகள் தமிழ்த் தேசியக்காரர்களுக்கு எங்களைப் போன்ற புதிய தலைமுறையுடன் பேசுகின்ற மொழி தெரிவதில்லை என நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார். உண்மையில் இந்த மொழிப் பிரயோகத்தை பாரம்பரிய அரசியலில் தேர்ச்சி பெற்ற சம வயதுக் குழுக்களினாலேயே சரியாக மேற்கொள்ள முடியும். அவ்வாறான ஒரு சிலரையாவது உருவாக்குவதற்கு பாரம்பரிய அரசியல்காறர்கள் முயற்சிகளைச் செய்வதில்லை. இதில் முக்கியமானது இளையோரின் உளவியலைப் புரிந்து கொள்வதாகும்.
புதிய தலைமுறைக்கு வேறுபட்ட விருப்பங்கள் அபிலாசைகள் இருக்கின்றன. அதனை வெளிப்படையாகக் கண்டு கொள்ள முடியாது. புதிய தலைமுறையின் உலகத்திற்குள் நுழைய வேண்டும், அதன் போதே அதனை கண்டுபிடிக்கலாம்.
தமிழக தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமிழ் அரசியலுக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது. அதில் முதலாவது புதிய தலைமுறை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும். குறிப்பாக இரண்டாயிரம் ஆண்டிற்கு பின் பிறந்தவர்களில் அதிக கவனம் தேவை. இன்றைய இளைஞர்கள் அவர்கள்தான். இவர்கள் போரின் வலி அறியாதவர்கள். பூகோளமயமாக்கலின் நச்சுச் சூழலுக்கு உட்பட்டவர்கள். இவர்களை முதலில் அரசியலுக்குள் உள் வாங்க வேண்டும். முன்பு கட்சிகளுக்கு வலுவான இளைஞர் அணிகள் இருந்தன. அதில் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் சேர்ந்தனர். ஆயுதப் போராட்டத்திற்கும் அவர்களே முன்னோடிகளாக இருந்தனர். தமிழ் மாணவர் பேரவை (1970), தமிழ் இளைஞர் பேரவை (1973) என்பன இளைஞர்களை அரசியலுக்குள் இழுப்பதற்கும், அரசியல் மயப்படுத்துவதற்கும் வலுவான பங்களிப்புகளை வழங்கியிருந்தன. அதில் அங்கம் வகித்தவர்களில் தற்போது ஒரு சிலரே உயிருடன் உள்ளனர். அவர்களும் எழுபது வயதைத் தாண்டியவர்கள். அவர்களுடன் உரையாடினால் பல கதைகளைக் கூறுவார்கள். அண்மையில் மரணமான த.முத்துக்குமாரசுவாமி (குமார்) தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கியவர்களில் ஒருவர். அவருடன் தொலைபேசியில் கதைக்கும் போது மணிக் கணக்கில் பழைய கதைகளைக் கூறுவார். துரதிஷ்டவசமாக அவை பெரியளவிற்கு வரலாற்றுப் பதிவுகளாக இல்லை.
தற்போது தமிழ்க் கட்சிகளிடம் கிராமிய கட்டமைப்புக்கள் கூட கிடையாது. அதனை உருவாக்குவதில் அவர்கள் கவனம் செலுத்துவதுமில்லை. பெரிய கட்சிகள் எனக் கூறுபவர்களிடமும் இல்லை. கொள்கைக் கட்சி எனக் கூறுபவர்களிடத்தும் இல்லை. சீமானின் தோல்விக்கு கிராமிய கட்டமைப்புகள் ஒழுங்காக இல்லாமையும் ஒரு காரணமாகும்.
புதிய தலைமுறையை அணுகும் போது பாரம்பரிய அரசியலை புதிய சூழலுக்கு ஏற்ப செப்பனிட்டுக் கொண்டே அணுகுதல் வேண்டும். பழைய அரசியலை அப்படியே கொப்பி அடிப்பது அவர்கள் மத்தியில் கவர்ச்சியைக் கொடுக்காது.
இரண்டாவது அரசியல் பிரதிநிதித்துவத்தில் புதிய தலைமுறைக்கும் சந்தர்ப்பங்களை வழங்குதல் வேண்டும். ஒருவர் இரு தடவைக்கு மேல் வேட்பாளராக நிற்கக் கூடாது என்ற விதியை கட்சிகள் அமூல்படுத்துவதும் இந்த இடத்தில் பொருத்தமானதாக இருக்கும். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சிலர் வாழ்நாள் சொத்தாக கருதப் பார்க்கின்றனர். சம்பந்தன் போல இறக்கும் வரை பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பது தேவையற்றது. முதியவர்கள் இளையவர்களுக்கு வழி விட்டு ஆலோசகர்களாக இருப்பது அதிகம் ஆரோக்கியமானதாக இருக்கும். அரசியல் மயப்;படுத்தும் முயற்சியும் தொடர்ச்சியாக இடம்பெறுதல் வேண்டும். உள்நாட்டு அரசியல் மாற்றங்களஇ; சர்வதேச அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை உடனுக்குடன் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக புதிய தலைமுறையினை மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக்கழகம் ஓர் முக்கிய கட்சி. ஆளும் கட்சியாகவும் அதுவே உள்ளது. முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விஜய் உள்ளார். சொந்த விருப்பு வெறுப்புக்களுக்குப்பால் முதலில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்; அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும.; ஈழத் தமிழர் நிலை நின்று அவரைப் பயன்படுத்துவதற்கான மார்க்கங்களை கண்டாக வேண்டும். அவருடனும் அவரது கட்சியுடனும் நல்ல உறவுகளைப் பேண வேண்டும். தமிழ்த்தேசியப் பேரவையினர் தமிழ்நாட்டிற்கு சென்ற போது விஜய்யினை சந்திப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அப்போதே அவர் முக்கிய தலைவராக வருவார் என்பது எதிர்வு கூறப்பட்டது. இனிவரும் காலங்களில் இத்தகைய தவறுகளை விட முயற்சிக்கக் கூடாது.
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை தந்தை செல்வா காலத்திலிருந்து பின்பற்றப்படுகின்ற மரபு அங்குள்ள அரசியலுக்குள் மாட்டுப்படக்கூடாது என்பதே! எந்த ஒரு கட்சி தொடர்பாகவும் சார்பு நிலை எடுக்கக் கூடாது. எல்லாக் கட்சிகளிலிருந்தும் சம தூரத்தில் நின்று கொண்டு ஈழத் தமிழர்கள் தொடர்பாக பொது ஆதரவினைக் கோர வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்கு செயற்படும் அனைத்து மாநிலஇ தேசியக் கட்சிகளின் ஆதரவும் தமிழ் மக்களுக்கு தேவையானது. இதில் சிறிய கட்சிகள்இ பெரிய கட்சிகள் என்ற வேறுபாடுகள் வேண்டாம்.
அங்குள்ள கட்சி முரண்பாட்டிற்குள் அகப்படாமல் தமிழ்நாட்டின் பொது விவகாரங்களுக்கு ஈழத்தமிழர்களாக ஆதரவு கொடுக்கலாம். உதாரணமாக காவேரி நதி நீர் விவகாரம்இ முல்லைப் பெரியாறு நதிநீர் விவகாரம் போன்ற பொதுப் பிரச்சனைகளுக்கு ஈழத் தமிழர்களாக ஆதரவு கொடுக்கலாம்.
தமிழ் நாட்டு மக்கள் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மிகச் சிறந்த சேமிப்புச் சக்திகள் என்பதை நாம் மறக்கக்கூடாது