கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர் ஒருவரும் விசேட கைது.

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலிற்கு அமைவாக பொலிசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் அப்பகுதியில் காணப்படும் கனகாம்பிகை ஆற்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவது தொடர்பில் அவதானித்த கிராமத்த இளைஞர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 119 இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்கப்பட்டபோதிலும் பொலிசார் அதனை தடுக்கவோ அல்லது விசாரணை மேற்கொள்ளவோ இல்லை.
இந்த நிலையில் குறித்த இளைஞர்கள் ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு தகவல் வழங்கியிருந்தனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாருக்கு ஊடகவியலாளர்களாலும் தகவல் வழங்கப்பட்டபோதிலும் பொலிசார் உடன் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு ஊடகவியலாளர்களால் தகவல் வழங்கப்பட்டது. குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். இதன்போது கசிப்பு உற்பத்தி மேற்கொண்ட உபகரணங்கள், ஏறத்தாழ 200 லீட்டர் கோடா மற்றும் 30 போத்தல் கசிப்பு ஆகியனவும் கைப்பெற்றப்பட்டது.
அத்துடன் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும், மீட்கப்பட்ட உபகரணங்களையும் கிளிநொச்சி பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நீதிமன்றில் வழங்கு தொடரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிதத் துணிகரமான பணியில் ஈடுபட்ட பிரதேச இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews